சென்னை: முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகளை நட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது வயதுக்கு ஏற்ப, மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறும். தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், அதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து ரூ.10.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.