சென்னை விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இம்தியாஸ், அசாருதீன் ஆகியோரிடம் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்கள் மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 193 கிராம் அளவிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அர்ஷத் அலி, ஆசிஃப் அகமது ஆகியோரிடம் புதன்கிழமை இரவு சோதனை நடத்தப்பட்டது. அதில் 797 கிராம் அளவிலான தங்கத்தை அவர்கள் மலக்குடலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்மூலம் இவர்கள் நான்கு பேரிடம் இருந்தும் ரூ.32.30 லட்சம் மதிப்பிலான 990 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.