ரயில் பெட்டி தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்க திட்டம்: ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

 ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக  ரூ.2,500 கோடி ஒதுக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை ஐ.சி.எஃப்.பில் தயாரிக்கப்பட்ட 60 ஆயிரமாவது தானியங்கி ஆய்வு ரயில் பெட்டி. 
சென்னை ஐ.சி.எஃப்.பில் தயாரிக்கப்பட்ட 60 ஆயிரமாவது தானியங்கி ஆய்வு ரயில் பெட்டி. 


 ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக  ரூ.2,500 கோடி ஒதுக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ரூ.500 கோடி ஐ.சி.எஃப்-க்கு ஒதுக்கப்பட உள்ளது என்று ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.
இந்திய ரயில்வேயின் தலைசிறந்த ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை)  விளங்குகிறது. இங்கு தானியங்கி ரயில் பெட்டிகள், சொகுசு ரயில் பெட்டிகள், அதிவேக  வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான ரயில் பெட்டிகள் போன்ற பல்வேறு ரகங்களில் பெட்டிகள்  தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐ.சி.எஃப் சார்பில், 60,000-ஆவது ரயில்பெட்டி (தானியங்கி ஆய்வு ரயில்பெட்டி)  தயாரிக்கப்பட்டுள்ளது. 
இந்த பெட்டியை ஐ.சி.எஃப் ஆலையிலிருந்து தெற்கு ரயில்வேக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ஐ.சி.எஃப் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  ரயில்வே வாரிய (ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் துறை) உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் முன்னிலையில், ஐ.சி.எஃப்  மூத்த ஊழியர் கே. வெங்கடேஸ்வரலு கொடியசைத்து ரயில் பெட்டியை அனுப்பி வைத்தார். இதையடுத்து, ராஜேஷ் அகர்வால், ஐ.சி.எஃப்- இல் இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்ய தயாராகி வரும் ரயில் பெட்டிகளை பார்வையிட்டார்.  
பின்னர், அவர் நிருபர்களிடம்  கூறியது: ஐ.சி.எஃப் கடந்த ஆண்டில் (2018-19)  3,262 ரயில்பெட்டிகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ரயில் பெட்டித் தொழிற்சாலையாக ஐ.சி.எஃப்.  திகழ்வது  மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிதியாண்டில் (2019-20) 4,000 ரயில்பெட்டிகளைத் தயாரித்து, பழைய சாதனையை ஐ.சி.எஃப். முறியடிக்கும்.
ஐ.சி.எஃப். ஆலையில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத ரயில் தில்லி- வாரணாசி இடையே பயணிகள் ஆதரவுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் ரயில்-18 வடிவமைப்பில், குளிர்சாதனவசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட ரயில்-19 ரயிலை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில்-18 போன்ற 40 ரயில் தொடர்களை ஐ.சி.எஃப். உற்பத்தி செய்ய உள்ளது.  ரயில்-18 இன் இயக்கத்தின் போது கால்நடைகள் வந்து மோதி ரயிலின் முன்புறம் சேதம் ஆவதை தவிர்க்க அலுமினியம் கொண்ட வடிவமைப்பு பயன்படுத்தப்படவுள்ளது. 
ரயில் 18 ரயில் தொடர்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய  தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இந்திய ரயில்வேயின் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு அது குறித்து முடிவு எடுக்கப்படும். 
இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இதில், ரூ.500 கோடி ஐ.சி.எஃப்-க்கு ஒதுக்கப்படும். சென்னை புறநகர் ரயில்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில்களை இயக்குவது குறித்து ரயில்வே வாரியம் ஆலோசித்து, விரைவில் தெற்கு ரயில்வேக்கு உரிய ஆலோசனை வழங்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக, ஐ.சி.எஃப்-இல் கடந்த ஆண்டு அதிக அளவில் ரயில் பெட்டிகள் தயாரிக்க சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு  ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com