சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 7 -ஆம் தேதி வரை நடைபெறும் என அந்நிறுவன வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் கூறினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
எஸ்.ஆர்.எம். உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பொறியியல் கல்வி பயில கடந்த ஏப்ரல் 15 முதல் 25 -ஆம் தேதி வரை நாடெங்கும் 123 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வு நடைபெற்றது. இதில், 1.40 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு
முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கே.வி.விக்ரம் முதலிடத்தையும், உத்தரப்பிரதேசம், ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கான கவுன்சலிங் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை நடைபெற உள்ளது. முதல் 100 இடங்களைப் பெற்றவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். கல்வி நிறுவன வேந்தரின் உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் 101 முதல் 3000 வரை இடம் பெற்றவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் 25 சதவீதம் வரை கட்டணச் சலுகை அளிக்கப்படும். விளையாட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கியோர், மாற்றுத் திறனாளிகள் பிள்ளைகளுக்கு உயர்கல்வி சலுகை அளிக்கப்பட உள்ளது என்றார் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர்.