சென்னை கண்ணகி நகரில் வீட்டில் தனியாக வசித்த பெண் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணகிநகர் எழில்நகர் 7-ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ப.மலர் (48). கணவரை விட்டு பிரிந்து இவர், அங்கு தனியாக வசித்து வந்தார். இவரது மகள் திருமணமாகி திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் மலரின் வீடு சில நாள்களாக பூட்டியே கிடந்துள்ளது. இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணகிநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மலர் அங்கு அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கண்ணகிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.