சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர் கிருஷ்ணர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆ.சந்திரசேகர் (55). திரைப்பட தயாரிப்பாளரான இவர், நடிகர் விஷால் தயாரித்து, நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்று இருந்தார். சந்திரசேகரிடம் இருந்து அந்த திரைப்படத்தை விநியோக உரிமையை சிதம்பரம், விஜய் பிரவீண், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் பெற்றனர். இதற்காக 3 பேரும் ரூ.3 கோடிக்கான காசோலையை மூவரும் வழங்கினர்.
அந்த காசோலையில் இருந்து, பணம் பெறுவதற்காக சந்திரசேகர் வங்கியில் செலுத்தியபோது, அந்த கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்துள்ளது. இதையடுத்து சந்திரசேகர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் 3 பேர் மீதும் புகார் செய்தார். ஆனால் போலீஸார், அப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து அவர், மோசடி செய்த 3 பேரும் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சைதாப்பேட்டை 18-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நடுவர் மன்றம், 3 பேர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவலர்கள், சிதம்பரம், விஜய் பிரவீண், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.