1 மணி நேரம் நீடித்த மழை: மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்

1 மணி நேரம் நீடித்த மழை: மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்

சென்னை மாநகர், புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை மாநகர், புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்தது. இதனால், வறட்சி ஏற்பட்டு கோடை காலத்துக்கு முன்பே பெரும்பாலான மாவட்டங்களில்  வெயில் அதிகரித்து காணப்பட்டது. வறட்சி காரணமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்  ஏரிகள் வறண்டன.  தண்ணீர்த் தட்டுப்பாடு, கடுமையான வெயில் ஆகியவற்றால் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
பரவலாக மழை: இந்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெப்பச்சலனம் காரணமாக சென்னை மாநகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 20-ஆம் தேதி பரவலாக மழை பெய்தது. அதன் பின் பெரிய அளவிலான மழை பெய்யவில்லை.
இந்நிலையில் அம்பத்தூர், கீழ்ப்பாக்கம், பாடி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, போரூர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோட்டூர்புரம், அடையாறு, சோழிங்கநல்லூர், கந்தன்சாவடி, ஆலந்தூர், பெரியமேடு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளிலும், பல்லாவரம், மீனம்பாக்கம், பூந்தமல்லி ஆகிய புறநகர்ப் பகுதிகளிலும் புதன்கிழமை மாலையில் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சில இடங்களில் சற்று பலமாகவும் சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. கடுமையான வெப்பத்தால் புழுக்கத்தில் இருந்த சென்னை மாநகர மக்கள் இந்த மழையால் குளிர்ச்சியான சூழலை அனுபவித்தனர். 
போக்குவரத்து நெரிசல்: புதன்கிழமை மாலை பெய்த மழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பணி முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரம் என்பதால், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com