சென்னை சென்ட்ரல் அருகே மத்திய சதுக்கம் அமைப்பதற்கான பணிகளை மெட்ரúô ரயில் நிறுவனம் தொடங்கவுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் ரூ.389 கோடியில் சென்னை சென்ட்ரல் பகுதியில் மத்திய சதுக்கம் அமைக்கப்பட இருக்கிறது. ரிப்பன் மாளிகை, விக்டோரியா கூடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு நடுவில் உலகத் தரத்தில் மத்திய சதுக்கமாக மேம்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்தத் திட்டத்துக்கான நிதி முழுவதையும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஏற்றுக் கொள்ளவுள்ளது. இந்த மத்திய சதுக்கத் திட்டத்தில் உலகத் தரம் வாய்ந்த புல்வெளிப் பூங்கா, நிலத்தடி வாகனப் பேருந்து நிறுத்துமிடம், பயணிகள் சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வாயன்ட்ஸ் சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் ஒரு போக்குவரத்து அமைப்பில் இருந்து மற்றொரு போக்குவரத்து அமைப்புக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் மாறிச் செல்வதற்கு ஏதுவாக மத்திய சதுக்கம் அமைக்கலாம் என தமிழக அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, நிர்வகிக்கும் பொறுப்பை மெட்ரúô ரயில் நிறுவனத்துக்கும் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கான வடிவமைப்பு, மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை குறித்து சென்னையில் திங்கள்கிழமை ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின்போது மத்திய சதுக்கத்திற்கான வடிவமைப்பு, மேம்பாட்டுப் பணிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்துக்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கவுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.