நிபா வைரஸ் கிருமி தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தப்படுத்தியுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதற்கென 7 அறைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு தனித்தனியே சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை நிபா வைரஸ் பாதிப்புடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால், அவரிடமிருந்து பிறருக்கு அது பரவாமல் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றும் நோய்களுக்கு உயர் சிகிச்சைகள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்கள் இங்கு பூரணமாக குணப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை.
ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் அந்த அறிகுறிகளுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளுடன் 7 அறைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகளும், கவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.