சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 11 பேரிடம் இருந்து உடல் உறுப்பில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை, மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த விமானத்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த ஹமீது குர்ஃபான் பாதுஷா, மீரா ஹூசைன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ணு, சையது அலி உள்ளிட்ட 11 பேரிடம் சுங்கத் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், அவர்கள் உடலுறுப்பில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இருவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.