சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு பெய்த பரவலான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்தது. வறட்சி காரணமாக சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டதாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் மாநகர் முழுவதும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக 197 நாள்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை அடுத்த சில நாள்களுக்குத் தொடரும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து சில நாள்களில் சென்னையில் மாலை நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் அம்பத்தூர், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், வடபழனி, கோட்டூர்புரம், அடையாறு, போரூர், ஆலந்தூர் உள்ளிட்ட நகர்ப் பகுதிகளிலும், சோழிங்கநல்லூர், பல்லாவரம், மீனம்பாக்கம், திருவேற்காடு ஆகிய புறநகர்ப் பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பருவமழை: தென் மேற்குப் பருவமழை கடலோர கர்நாடகத்தில் தீவிரமாகியுள்ளது. இதுதவிர, வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலில் பருவமழை மிதமாக மேம்பட்டு வருகிறது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அரியலூரில் 90 மி.மீ. மழை பதிவானது. தருமபுரி மாவட்டம் அரூரில் 70 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 70 மி.மீ., சேலம் மாவட்டம் ஆத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விருதுநகர், நாகப்பட்டினம், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியில் தலா 50 மி.மீ. மழை பதிவானது.