சென்னை

ரயிலில் வந்த தண்ணீர் பெரம்பூர், அண்ணாநகர் பகுதிகளில் விநியோகம்: கூடுதலாக ஒரு ரயிலில் எடுத்துவர ஏற்பாடு

15th Jul 2019 02:01 AM

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீர் பெரம்பூர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
 சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. இதனால் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கல் குவாரிகள், விவசாயக் கிணறுகள் போன்றவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த தண்ணீர் சென்னைவாசிகளுக்கு போதுமானதாக இல்லை.
 எனவே, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி நீரை ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வர முடிவு செய்து அதற்கான பணி மும்முரமாக நடைபெற்றன. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த ரயில் சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தடைந்த பிறகு, அங்கு குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.
 ரயிலில் தண்ணீர் கொண்டு வந்த 50 வேகன்கள் இரவு ஜோலார்பேட்டைக்கு அனுப்பப்பட்டன. பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், கொளத்தூர், கொரட்டூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு ரயிலில் வந்த தண்ணீர் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 மேலும் ஒரு ரயிலில்...: அரசுத் திட்டத்தின் படி, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 6 மாத காலம் தொடர்ந்து தண்ணீர் கொண்டு வரப்படும். இந்தத் தண்ணீரில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், தற்போதைய நிலவரப்படி 50 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும், ஒரு ரயிலில் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 2 ரயில்கள் மூலம் தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வருவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
 
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT