சென்னையை அடுத்துள்ள சிட்லபாக்கம் ஏரி ரூ.25 கோடியில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
இதுகுறித்து, அவர் பேரவையில் விதி 110-ன் கீழ் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டத்திலுள்ள சிட்லபாக்கம் ஏரியில் சூழல் மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 219 ஏக்கர் விவசாய நிலங்களை ஆயக்கட்டு பரப்பாகக் கொண்டுள்ளது. ஆனால், இப்போது அந்த ஏரி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரியைச் சீரமைக்கும் வகையில் ஆக்கிரமிப்பை அகற்றுதல், மண் திட்டுகளால் குறைந்துள்ள நீரின் கொள்ளளவை அதன் உச்ச கொள்ளளவுக்கு திரும்பச் செய்தல், ஏரிக்கரையை பலப்படுத்துதல், உபரி நீர் வீணாவதை தடுத்தல், உபரிநீர் தடுப்புச் சுவர் வசதிகளை மீண்டும் ஏற்படுத்துதல், வெள்ள நீரை வடிகால்கள் மூலமாக திருப்புதல், கழிவுநீரை தடுப்பாண்களை ஏற்படுத்தி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திருப்புதல் போன்ற பணிகள் ரூ.25 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.