சென்னை வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் எல்கேஜி மாணவர் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை, புது வண்ணாரப்பேட்டை கிராஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (37). மென்பொருள் பொறியாளரான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பிரசாத்துக்கு, சுகந்தி சர்மிளா (35) என்ற மனைவியும், ஜோசப் (3) என்ற மகனும் இருந்தனர்.
ஜோசப், வண்ணாரப்பேட்டை எம்.சி.எம்.கார்டனில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் பிரிகேஜி படித்து வந்தார். வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற ஜோசப்புக்கு, மதியம் வகுப்பு ஆசிரியர் சாப்பாடு ஊட்டி விட்டாராம். அப்போது ஜோசப்புக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வலிப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், ஜோசப்பை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் ஜோசப் இறந்தார். தகவலறிந்த ஜோசப்பின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரின்பேரில் தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.