தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இந்தப் புனிதப் பயணம் பெத்தலஹேம், ஜெருசலம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதம் தொடர்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. புனிதப் பயணம் நிகழாண்டு மார்ச் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றிப் பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்கள் புனித பயணத்துக்கான விண்ணப்பம் என குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலசமகால், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரிக்கு வரும் மார்ச் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.