நோயாளிகள் - மருத்துவர் இடையேயான நல்லுறவு குறித்து சர்வதேச மருத்துவர்களும், இந்திய மருத்துவர்களும் எழுதிய அனுபவக் குறிப்புகள் தனி நூலாகத் தொகுக்கப்பட்டு சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
வித்தியாசமான நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து 30 மருத்துவர்கள் எழுதிய சிறப்பு கட்டுரைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தேவராஜ் ஷோம் மற்றும் அபர்ணா கோவில் பாஸ்கர் ஆகியோர் தொகுத்துள்ளனர். புத்த மதத் தலைவர் தலாய் லாமா அதற்கு முன்னுரை எழுதியுள்ளார்.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற விழாவில் அந்நூலினை சர்க்கரை நோய் மருத்துவ நிபுணரும், டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையத்தின் தலைவருமான டாக்டர் மோகன் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர் மட்டும் மருத்துவர் அல்ல. மாறாக, அவர்களோடு உணர்வு சார்ந்த பந்தத்திலும் இருக்கக்கூடியவர் அவர். நோயாளியின் குடும்பத்தினரில் ஒருவராக, நண்பராக, நலம் விரும்பியாக செயல்படக் கூடிய மருத்துவர்கள்தான் சமூகத்தில் மேலோங்கி நிற்கிறார்கள்.
பொதுவாக எந்த வகையான நோயாக இருந்தாலும் அதற்கென தனித்தனியே சிகிச்சைகளும், மருந்து - மாத்திரைகளும் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் தாண்டி நம்பிக்கை என்ற ஒரு அருமருந்து இருக்கிறது. அதுதான் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனைக் குணப்படுத்துவதில் அதிமுக்கியப் பங்கு வகிக்கிறது.
என்னிடம் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கு 50 வயதில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது.
தன்னம்பிக்கையும், இறை நம்பிக்கையும் கொண்ட அவர், என்னிடம் சிகிச்சைக்கு வரும் போதெல்லாம், தாம் விரைவில் குணமாகிவிடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறுவார்.
அது பொய்யாகவில்லை. வெகு விரைவிலேயே அவர் நலம் பெற்றார். மற்றொரு புறம் சாதாரண நோயால் பாதிக்கப்பட்ட சிலர் மனம் சோர்வடைந்து நம்பிக்கையிழந்து அதில் இருந்து மீண்டு வர முடியாமல் மாண்டு போனதையும் பார்த்துள்ளேன். எனவே, நம்பிக்கை இருந்தால் நோயை வென்று நலம் பெறலாம் என்றார் அவர்.