சென்னை திரு.வி.க நகர் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உள்பட்ட பேப்பர் மில்ஸ் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டியிருந்தனர். அந்த கட்டடங்களைக் காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் காலி செய்ய மறுத்ததால், அதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேப்பர் மில்ஸ் சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 10 கட்டடங்களை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கிருந்த ஆக்கிரமிப்பாளர்கள் 9 பேரும் தாமாக முன் வந்து தங்களது கட்டடங்களை காலி செய்தனர்.
ஆனால், மீதமுள்ள ஒரு ஆக்கிரமிப்பை அகற்ற தண்டுமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், பேப்பர் மில்ஸ் சாலையில் சுமார் 250 சதுர அடி பரப்பளவுள்ள ஆக்கிரமிப்பை காவல் துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.