தமிழக அரசின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலா சாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளி கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளி ஆக அனுசரிக்கப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை (ஆக.30) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம், கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் 35-வயதிற்குட்பட்ட 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டயப் படிப்பு, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.