கல்வித் தொலைக்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சிகளை அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
பள்ளி மாணவர்களுக்கான கல்வித்தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் திங்கள்கிழமை காலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அன்றைய தினம் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கான
அனைத்துப் பள்ளிகளிலும் முன்கூட்டியே தொலைக்காட்சிப் பெட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
டி.வி.க்கள் இல்லாத பள்ளிகளில் மாற்று ஏற்பாடாக கணினி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் மூலமாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
அப்போது தொடக்க விழாவில் பரதநாட்டியம், கல்வி வளர்ச்சி குறித்த தெருக்கூத்து, அரசுப் பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய பாரம்பரிய கலைகள் ஆகியவற்றை பார்த்த மாணவ, மாணவிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சென்னையில் அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
ஆயிரக்கணக்கான மாணவிகள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். இது குறித்து மாணவிகள் கூறுகையில், எங்களைப் போன்ற மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்த கல்வித் தொலைக்காட்சி ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. எங்களுக்காக இந்தத் தொலைக்காட்சி சேனலை தொடங்கிய தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.