சென்னை ராயப்பேட்டையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து எட்டு இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ், ஜாம்பஜார், திருவல்லிக்கேணி, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாகத் திருடுபோயின. இத்திருட்டில் ஈடுபடுவர்களைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் திருட்டு நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், வாகனத் திருட்டில் ஈடுபட்டது ராமநாதபுரத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன், அவரது கூட்டாளிகள் முகமது சபீக், முகமது மைதீன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. சென்னையில் இருசக்கர வாகனத்தை திருடி ராமநாதபுரத்தில் விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.