சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் அனுமதியின்றி கேபிள் பதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தனியார் இணையதள நிறுவனங்கள், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்களை முறைபடுத்துதல் மற்றும் அனுமதியின்றி பதிக்கப்பட்டுள்ள கேபிள்களை அகற்றுவது குறித்த ஆய்வுக் கூட்டம் ஆணையர் ஜி.பிரகாஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அவர் பேசியதாவது: மாநகராட்சி மண்டலங்களிலுள்ள அனைத்து சாலைகள், தெருக்களில் வார்டு வாரியாக உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் களஆய்வு மேற்கொண்டு அவற்றின் நிலை குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் 26 தனியார் நிறுவனங்கள் தொலைக்காட்சி கேபிள் மற்றும் கண்ணாடி இழை கேபிள் பூமிக்கு அடியில் புதைக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தைச் செலுத்தி அனுமதி பெற்றுள்ளனர்.
இவற்றில் அனுமதி அளிக்கப்பட்ட நீளத்துக்கு மேல் கேபிள்கள் அமைத்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான வாடகையைச் செலுத்த உரிய கால அவகாசம் வழங்கப்படும். தவறும்பட்சத்தில் அனுமதிக்கப்பட்ட நீளத்துக்கு மேல் உள்ள கேபிள்கள் அகற்றப்படும்.
மேலும், மாநகராட்சியின் உரிய அனுமதி பெறாமல் பூமிக்கு அடியில் கேபிள் பதித்துள்ள நிறுவனங்கள் விரைவில் அனுமதி பெற்று அதற்கான வாடகையைச் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அனுமதி பெறாமல் பதித்துள்ள அனைத்து கேபிள்களும் அகற்றப்படும் என்றார்.