சென்னையில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் பொன் விழா ஆண்டை எட்டியுள்ளது. அதற்கான சிறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஆக.20) நடைபெற்றது.
அதில், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பொன் விழா புகைப்படக் கண்காட்சியை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், துணைத் தூதர் ராபர்ட் பர்கெஸ், வரலாற்று ஆய்வாளர் வி.ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது கென்னத் ஜஸ்டர் பேசியதாவது: வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க துணைத் தூதரகம் சென்னையில் செயல்படத் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. பல்வேறு பெருமைகளையும், வரலாற்றையும் தாங்கி நிற்கும் அக்கட்டடத்தின் மாண்பை மட்டும் இந்தத் தருணத்தில் கொண்டாட இயலாது. அதனுடன் சேர்த்து அமெரிக்க - சென்னை நகரின் இடையேயான உறவை வலுப்படுத்திய அனைத்து தரப்பினரையும் கொண்டாட வேண்டிய மிக முக்கியமான தருணமாக இது அமைந்துள்ளது என்றார் அவர்.
இதனிடையே, துணைத் தூதரகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வார நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அதனைப் பார்வையிடலாம். அண்ணா சாலையின் ஜெமினி மேம்பாலத்துக்கு கீழே கடந்த 1969-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது அமெரிக்க துணைத் தூதரகம். அப்போதைய ஆளுநர் சர்தார் உஜ்ஜால் சிங், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் செஸ்டர் பவ்லஸ், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.