ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். அதில் அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன் 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில், அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியே தற்போது இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
வரும் 23-ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.