விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னையில் விநாயகர் சிலைகளை அமைப்பதற்கு ஒற்றைச் சாளர முறையை பின்பற்றப்படும் என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு: விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்து இயக்கங்களுக்கும், பல்வேறு சமூக அமைப்புகளும் விநாயகர் சிலைகளை நிறுவும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. விநாயகர் சிலைகளை அமைப்பதற்கு இது வரை அதை நிறுவும் அமைப்புகள் காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மின்வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளிடம் தனித்தனியாக அனுமதி பெற வேண்டியிருந்தது. இந்த துறைகளிடம் அனுமதி பெறப்பட்ட பின்னரே, விநாயகர் சிலை அமைப்பதற்கு முழுமையாக அனுமதி கிடைக்கும். இதனால் சிலைகளை அமைக்கும் அமைப்பினர் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.
ஒற்றைச் சாளர முறை: இதைக் கருத்தில் கொண்டு, இந்தாண்டு விநாயகர் சிலைகளை அமைப்பதற்கு ஒற்றைச் சாளர முறையை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, விநாயகர் சிலை அமைக்க தனித்தனியாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக, ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் ஒரு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விநாயகர் சிலை அமைக்க விரும்புகிறவர்கள், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை சந்தித்து மட்டும் மனு கொடுத்தால் போதும். அவரே, அந்த மனுக்கள் மூலம் பிற துறைகளிடமும் அனுமதி பெற்று, விநாயகர் சிலைகளை அமைப்பதற்கு முறையான அனுமதியை பெற்றுத் தருவார். எனவே விநாயகர் சிலைகளை அமைக்கத் திட்டமிடுகிறவர்கள், வரும் 22-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.