சேமிப்புத் திட்டத்தில் பயன்பெற சென்னை மத்திய கோட்டத்தில் 23 இடங்களில் புதிதாக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்திய அஞ்சல்துறை சார்பில், பல்வேறு அஞ்சல் திட்டங்களை நலிவடைந்தவர்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மத்திய கோட்ட அஞ்சலகம் சார்பில், புதிதாக 23 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை மத்திய முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ஆலோக் ஓஜா கூறியது: பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள மீனவர்கள், திருநங்கைகள், தினக்கூலி ஊழியர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அஞ்சல்துறையின் சேமிப்புத் திட்டங்களை அவர்களிடம் கொண்டு செல்ல தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 73,726 பேருக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுபோல, இந்தியா "அஞ்சல் பேமென்ட்' வங்கி பிரதமரால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் தற்போது சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அதிகமானோர் இந்தத் திட்டத்தை ஆர்வமுடன் பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் பொருத்தவரை, மத்திய கோட்டத்தில் 1,000 கணக்குகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல, சேமிப்புத் திட்டத்தில் பயன்பெற மத்திய கோட்டத்தில் 23 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 2018-19-ஆம் ஆண்டின் 30 ஆயிரம் வெளிநாட்டு தபால்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 18 லட்சம் விரைவுத் தபால்கள், 13 லட்சத்து 47 ஆயிரத்து 396 பதிவுத் தபால்கள் 2018-19ஆம் ஆண்டில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்து 83 பெண் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
பிரதமரின் ஜன்தன் யோஜனாவில் 4,250 கணக்குகளும், அடல் பென்ஷன் யோஜனா மூலம் 250 கணக்குகளும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மூலம் 500 கணக்குகளும், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மூலம் 3,500 கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிதி ஆண்டில் கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, விரைவில் இந்தத் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கு கிடைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார் அவர்.