மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் மருத்துவ வசதிகள், முதலுதவிக்கென 416 மருத்துவக்குழுக்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
17-ஆவது மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்காக மாநிலம் முழுவதும் 67 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், வாக்காளர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளுக்காக சுகாதாரத் துறை சார்பில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குறிப்பாக, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உப்பு நீர்க் கரைசல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் சுகாதாரத் துறை ஊழியர்கள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது: வாக்குப் பதிவு தினத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டன. மொத்தம் 416 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மாநிலம் முழுவதும் இயங்கின.
அதுமட்டுமன்றி, மாவட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசரச் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் வாக்குச் சாவடிகளுக்கு விரைந்து செல்வதற்கு ஏதுவாக ஆங்காங்கே 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சில வாக்குச் சாவடிகளில், பாராசிடமால் உள்ளிட்ட அத்தியாவசிய மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. தேவைப்படு வோருக்கு ரத்த அழுத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.வாக்குப் பதிவு நேரம் நிறைவடைந்த பிறகும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் செயல்பட்டாகவும் தெரிவித்தார்.