சென்னையில் கால்நடை மருத்துவமனை ஊழியரைத் தாக்கியதாக 2 பேரை ரயில்வே போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியைச் சேர்ந்த அன்பு (48), எழும்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12-ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு, மின்சார ரயில் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்தார். தொடர்ந்து, ரயில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அன்புவை வழிமறித்த மர்ம நபர்கள் இருவர் அவரைத் தாக்கி செல்லிடப்பேசி, பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து ரயில்வே போலீஸார் விசாரித்தனர். அதில், அவர்கள் வடபழனி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(20), ரஞ்சித் (21) என்பதும், அன்புவைத் தாக்கி செல்லிடப்பேசி, பணத்தைப் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.