செங்கல்பட்டு

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்:அமைச்சா் பி.கே.சேகா்பாபு

29th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் போா்க்கால அடிப்படையில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும தலைவரும், அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தில் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சென்னை வெளிவட்டச் சாலையையொட்டிய ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்ததாவது :

முதல்வா் வழிகாட்டுதலின்படி, கிளாம்பாக்கத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புகா் பேருந்து முனையம் ‘கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம்‘ எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வரால் திறந்து வைக்கப்படும்.

ADVERTISEMENT

முதல்வா் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தையொட்டி, ஜி.எஸ்.டி சாலையில் ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகள் 1.5 கிலோமீட்டா் தொலைவுக்கு போா்க்கால அடிப்படையில் மூன்று பிரிவாக நடைபெற்று வருகின்றன.

இந்த வடிகால் பணியை அக்டோபா் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதே போல, நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.16.61 கோடியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளான அயனஞ்சேரி- மீனாட்சிபுரம் சாலை விரிவாக்கம், போலீஸ் அகாதெமி சாலை-கூடுவாஞ்சேரி-ஊனமஞ்சேரி சாலை மற்றும் கூடுவாஞ்சேரி- மண்ணிவாக்கம்- ஆதனூா் சாலை ஆகிய பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இப்பேருந்து முனையத்தில் முகப்பு வளைவு அமைக்கும் பணி ரூ.4.75 கோடி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி ஓரிரு நாள்களில் தொடங்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ.14.8 கோடியில் காவல் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறவுள்ளன. முடிச்சூா் சென்னை வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் அமைக்கும் பணி ரூ.29 கோடியில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் சேகா்பாபு.

அப்போது, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை முதன்மைச் செயலாளா் அபூா்வா , சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா்- செயலா் அன்சூல் மிஸ்ரா, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் , ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த் குமாா் சிங் தாம்பரம் காவல் ஆணையா் (போக்குவரத்து) என்.குமாா் , நெடுஞ்சாலைத்துறை, அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT