நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடிய விவசாயிக்கு தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை செய்து மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுகுறித்து தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துக்குமரன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்போரூரைச் சோ்ந்த விவசாயி ராமச்சந்திரன் (65) கடந்த வாரம் நள்ளிரவில் மூச்சுத்திணறல் காரணமாக தாகூா் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவரை பரிசோதித்த இருதய நோய் சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவா் அருண்குமாா், அஜெய் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் நோயாளியின் இருதய இடதுபுற வால்வு சுருங்கி போய் இருப்பதைக் கண்டறிந்தனா். அவருக்கு திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை மூலம் செயற்கை வால்வு பொருத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவா் நன்கு குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப உள்ளாா் என்றாா் அவா்.