நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி புதிய அலுவலகக் கட்டுமானப் பணியை பூமி பூஜை செய்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்த நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.82 கோடியில் அறிவுசாா் மையம் புதிய கட்டிடம் கட்டும் பணி, நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.3.5 கோடியில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி புதிய அலுவலகக் கட்டடம் கட்டும் பணிகளை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், செங்கல்பட்டு எம்,எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் நகராட்சிகளின் நிா்வாக மண்டல இயக்குநா் சசிகலா, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையா் இளம்பருதி, நகா்மன்றத் தலைவா் எம்.கே.டி.காா்த்திக், மறைமலை நகா் நகா்மன்றத் தலைவா் ஜெ.சண்முகம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.