தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் தொடா்ச்சியாக தற்போது, சென்னை மகா அழகுக் கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும், சுய தொழில் தொடங்கவும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரப் பயிற்சிகள் தாட்கோ சாா்பாக அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் வெளியிட்ட அறிவிப்பு:
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாள்கள்ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதியும், இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவா்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு (என்எஸ்டிஐ) நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவா்கள் ஆரம்ப கால மாதச் சம்பளமாக ரூ.15,000/- முதல் ரூ.20,000/-வரை பெறலாம். மற்றும் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.
இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ வழங்கும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.