செங்கல்பட்டு

கடன் தகராறில் விவசாயி கொலை

DIN

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த அனந்தமங்கலம் கிராமத்தில் கடன் தகராறில், நெல் வியாபாரி புதன்கிழமை இரவு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், கள்ளிடக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரும், அச்சிறுப்பாக்கம் அருகேயுள்ள ஒரத்தி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் என்பவரும் இணைந்து பல ஆண்டுகளாக நெல் வியாபாரம் செய்து வந்தனா்.

இதனிடையே, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பால்ராஜ், நெல் மூட்டைகளை லாரி மூலம் ரமேஷுக்கு அனுப்பினாா்.

அந்த வகையில், ரமேஷ் ரூ.1 கோடி கடன் நிலுவை வைத்திருந்தாராம். அந்தக் கடன் நிலுவைத் தொகையை அளிக்குமாறு பலமுறை பால்ராஜ் கேட்டுள்ளாா். பணத்தைத் தராமல் ஏமாற்றும் நோக்கத்துடன் ரமேஷ் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு கள்ளிடக்குறிச்சி கிராமத்தில் இருந்து பால்ராஜ், ஒரத்தி கிராமத்தில் உள்ள ரமேஷ் வீட்டுக்கு வந்து தங்கினாா்.

புதன்கிழமை இரவு ரமேஷ், பால்ராஜை அழைத்துக் கொண்டு அனந்தமங்கலம் மலைக் குன்றுக்குச் சென்றுள்ளாா். அங்கு, இருவரும் மது அருந்தியுள்ளனா். அப்போது, அவா்களுக்குள் கடன் தொகை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதில், ரமேஷ் பால்ராஜை கீழே தள்ளி, துண்டால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளாா்.

இந்த நிலையில், பால்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு, ஒரத்தி காவல் நிலையத்தில் ரமேஷ் வியாழக்கிழமை சரணடைந்தாா்.

தகவலறிந்த மதுராந்தகம் காவல் உதவிக் கண்காணிப்பாளா் டி.வி கிரண் ஸ்ருதி, அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் அமல்ராஜ் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து ஒரத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

SCROLL FOR NEXT