மாமல்லபுரம் அருகே காரணை ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றவர் நன்றி தெரிவிக்க சென்றபோது கோயிலில் சாமியாடிய பெண் விநோத கோரிக்கை வைத்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் பலர் கிராமங்கள் தோறும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் அடுத்த காரணை ஊராட்சிமன்ற தலைவராக விவசாய குடும்பத்தை பா.ம.க. மாவட்ட செயலாளர் தி.ராதாகிருஷ்ணன் என்பவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்து அவர்களை விட 3 மடங்கு வாக்குகள் கூடுதலாக பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இன்று தனக்கு அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெறச்செய்த காரணை, வளவந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கு தெரு, தெருவாகச் சென்று நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார். வளவந்தாங்கல் கிராமத்தில் நன்றி தெரிவிக்க சென்றபோது, அங்குள்ள கிராம மக்கள் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவரை அங்குள்ள துலுக்கானத்தம்மன் ஆலயத்திற்கு அழைத்து சென்று வழிபாடு செய்து மாலை அணிவித்தனர். அப்போது வரவேற்பு அளிக்க வந்த விஜயா என்ற பெண் திடீரென அருள் வந்து சாமியாடினார்.
இதையும் படிக்க- ஐபிஎல் கோப்பைகளை வென்றபோது விளையாடிய சிஎஸ்கே, கேகேஆர் வீரர்கள்
அப்போது அப்பெண்(விஜயா) சுமார் அரை மணி நேரம் அருள் வந்து சாமி ஆடியபடி புது ஊராட்சி தலைவரிடம் விபூதி வழங்கி சாலை வசதி, பஸ் வசதி இல்லாத தங்கள் ஊரின் குறைகளை சொல்லி அவரிடம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். இந்த ஊரில் விநாயகர் கோயில் இல்லை எனவும், இதுவரை விநாயகர் இங்கு வழிபட்டது இல்லை எனவும், இந்த அம்மன் கோயிலில் கிராம மக்கள் வழிபட சன்னதியுடன் புதிய விநாயகர் கற்சிலை அமைத்து தரவேண்டும் என்றும், அம்மன் அருள்வாக்குபாடி இவ்வூரில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு(ராதாகிருஷ்ணன்) வாக்கு அளித்தாகவும் அப்பெண் சாமியாடியபடி கூறினார்.
வெற்றி பெற்ற தலைவரை கோயிலில் நிற்க வைத்து அம்மன் ரூபத்தில் சாமி ஆடியபடி விநோதமாக அருள்வாக்கு முறையில் கூறி தங்கள் ஊரின் குறைகளை சொன்ன இந்த ருசிகர சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமி வந்து ஆடிய அப்பெண்ணிடம் ஊரின் அனைத்து குறைகளையும் கேட்ட அவர் அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துவிட்டு சென்றார். வித்தியாசமான முறையில் சாமி வந்து ஆடி ஊரின் குறைகளை சொன்ன இச்சம்பவம் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. வளவந்தாங்கல் சுற்றுப்புர கிராமப் பகுதிகளில் இச்சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.