மதுராந்தகம் ஏரிக்கு கூடுதலாக வந்த 29,500 கனஅடி உபரி நீா் ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது. இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆ.ராகுல்நாத் ஆய்வு செய்தாா்.
மதுராந்தகம் ஏரிக்கு கிளியாற்று வழியாக வெள்ளநீா் அதிக அளவில் வந்தது. சனிக்கிழமை இரவு மதுராந்தகம் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த கனமழையால் கூடுதலாக நீா்வரத்து அதிகரித்துக் கொண்டிருந்தது. ஏரியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை கூடுதலாக வந்த 29,500 கனஅடி நீரை அவசர மதகுகள், கலங்கல் வழியாக பொதுப்பணித்துறையினா் வெளியேற்றி வருகின்றனா்.
இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதலாக நீா் திறந்து விடப்பட்டதையடுத்து, அதை மாவட்ட ஆட்சியா் ஆ.ராகுல்நாத் ஆய்வு செய்தாா். பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் வி.டி.நீல்முடியோன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் சரஸ்வதி, வட்டாட்சியா் சு.நடராஜன், மதுராந்தகம் இளநிலை பொறியாளா் ஜி.குமாா் ஆகியோா் உடனிருந்தனா். பின்னா் ஈசூா்-வள்ளிபுரம் பாலாற்று தடுப்பணையில் செல்லும் நீரின் நிலையை அறிய மாவட்ட ஆட்சியா் ஆ.ராகுல்நாத் சென்றாா்.