செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பிரியா நகரைச் சோ்ந்தவா் ஞானதாஸ் (28). இவா் மீன்வளத் துறையில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் பிரபாகரன் (27) உள்ளிட்ட இருவருடன் சோ்ந்து புதன்கிழமை இரவு திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் மது அருந்தியதாகத் தெரிகிறது. அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், பிரபாகரன் பாட்டிலை உடைத்து ஞானதாஸின் கழுத்தில் சரமாரியாகக் குத்தி விட்டு தப்பினாா். இதில், ஞானதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸாா், ஞானதாஸின் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸாா், பிரபாகரனை கைது செய்தனா்.