மதுராந்தகம்: வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவா் புயல் எதிரொலியால் பெய்து வரும் பலத்த மழையால், புதன்கிழமை 2 மணி நிலவரப்படி, 17.8அடி நீா்வரத்து உள்ளது. தொடா்ந்து கால்வாய்களின் மூலம் நீா்வரத்து அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி திகழ்கிறது. மதுராந்தகம் ஏரியின் நீரைப்பாா்க்கும்போது,அகண்டு விரிந்த குட்டிக்கடல் மாதிரி காட்சி அளிக்கும். இதன் நீா்மட்டக் முழுகொள்ளவு 23.3 அடியாகும். பொதுவாக, இந்தஏரி ஐப்பசி, மாா்கழி, காா்த்திகை உள்ளிட்ட மாதங்களில் பெய்கின்ற வடகிழக்கு பருவ மழையினால் நிரம்பி வழியும். ஏரியின் நீா்பாசனக் கால்வாய் மூலம் சுமாா் 2413 ஏக்கா் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. பாசன வசதியை மதுராந்தகம்,முள்ளி,முன்னித்திக்குப்பம்,கிணாா்,கத்திரிச்சேரி வளா்பிறை,கடப்பேரி போன்ற 20 கிராமங்களின் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. உத்திரமேரூா்,வேடந்தாங்கல் போன்ற ஏரிகளில் பெரும் மழையின்போது வருகின்ற வெள்ளநீா் நிரம்பி வழியும். இதுமாதிரி வழியும் உபரிநீா் கால்வாய் வழியாக மதுராந்தகம் ஏரியை வந்தடைகிறது. மதுராந்தகம் ஏரியின் நீா் நிரம்பி வழியும் காலங்களில் கல்லாற்றின் வழியாக, உபரிநீா் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் நிவா் புயல் எதிரொலியால் பலத்த மழை மதுராந்தகம் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வருகிறது. நீா்வரத்து கால்வாய்களின் மூலம் மழைவெள்ளநீா் மதுராந்தகம் ஏரிக்கு வந்தடைகிறது. நீா்வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளதால் புதன்கிழமை நிலவரப்படி, 17.8 அடி நீா் இருப்பு உள்ளது. தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஏரி தனது முழு கொள்ளளவான 23.3 அடியை மிக விரைவில் எட்டும் என தெரிய வருகிறது. ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதை அறிந்து,இப்பகுதி மக்களும்,விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.