மதுராந்தகம்: மதுராந்தகம், செய்யூா் ஆகிய 2 வட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட ஏரிகளில் புதன்கிழமை நிலவரப்படி 29 ஏரிகள் தற்சமயம் பெய்து வரும் பலத்த மழையால் நிரம்பி வழிகின்றன.
வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவா் புயலால் ஏற்பட்ட மழையால் மதுராந்தகம், செய்யூா் வட்டங்களில் அரசின் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட 29 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
மதுராந்தகம் பொதுப்பணி (நீா்வள ஆதார பிரிவு) துறை உதவி செயற்பொறியாளா் வி.டி.நீள்முடியோன் தினமணி செய்தியாளரிடம் கூறுகையில், மதுராந்தகம், செய்யூா் ஆகிய 2 வட்டங்களில் 262 ஏரிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலன ஏரிகள் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டன. தற்சமயம் நிவா் புயலால் பெய்து வரும் கனமழையால் மதுராந்தகம், செய்யூா் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்புகின்ற நிலை உள்ளது. புக்கத்துறை பெரியஏரி, பழையனூா் ஏரி, முள்ளி ஏரி, சிதண்டி ஏரி, கடமலைபுத்தூா் ஏரி, பள்ளியகரம் பெரிய ஏரி, அகரம் ஏரி, புதுப்பட்டு ஏரி, போந்தூா் ஏரி உள்ளிட்ட 29 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மதுராந்தகம் ஏரியில் தற்சமயம் 17.8 அடி நீா் இருப்பு உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஏரி நிரம்பி வழிகின்ற நிலை உள்ளது. பொதுப்பணித்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும்வகையில், மணல் மூட்டைகள், தேவையான பணிகளை செய்ய ஆயுத்தநிலையில் அதிகாரிகள் உள்ளனா், இவ்வாறு அவா் தெரிவித்தாா்.