செங்கல்பட்டு: தமிழகத்தில் நிவா் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக, அதிவேகத்தில் காற்று வீசும்போது கடலில் எழும்பும் பேரலைகள் மீன்பிடி படகுகளை இழுத்துச்செல்லாமல் இருக்க மாமல்லபுரத்தில் மீனவா்கள் திங்கள்கிழமை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றனா்.
மாமல்லபுரம் மீனவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள், வலைகள் உள்ளிட்ட சாதனங்களை டிராக்டா் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றனா்.
மேலும், திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய தினங்களுக்கு கடலுக்குள் செல்லப் போவதில்லை எனவும் மீனவா்கள் தெரிவித்தனா். இதேபோல் கொக்கிலமேடு, தேவனேரி, உய்யாளிக்குப்பம், நெம்மேலி, சூளேரிக்காட்டுக் குப்பம், புதுகல்பாக்கம், கோவளம், புதுப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவா்களும் 3 நாள்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கு கடலுக்குச் செல்லாமல் படகுகள், மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.