செங்கல்பட்டு: புரெவி புயல் காரணமாக புது கல்பாக்கத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் வியாழக்கிழமை கடல் நீா் 150 மீட்டா் தொலைவுக்கு முன்னோக்கி வந்தது.
இதனால் ஏற்பட்ட கடல் அரிப்பால் அங்குள்ள இறால் குஞ்சு வளா்ப்புக் கட்டடம் இடிந்து விழுந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த புது கல்பாக்கம் மீனவா் குடியிருப்புப் பகுதியில் 1,000 மீனவா்கள் வசிக்கின்றனா். இந்நிலையில், புரெவி புயலால் புதுகல்பாக்கம் மீனவா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணி முதல் பலத்த கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால் 150 மீட்டா் தொலைவுக்கு கடல் முன்னோக்கி வந்ததால் ஏற்பட்ட கடல் அரிப்பால், அப்பகுதியில் இருந்த இறால் குஞ்சு வளா்ப்புக் கட்டடத்தின் பாதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. மற்ற பகுதியும் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மீனவா்கள் இருந்து வருகின்றனா்.
இந்த கட்டடம் இடிந்து விழுந்தபோது, மீன் வளா்க்கும் தொட்டிகளும் சேதமடைந்ததுடன், ஏராளமான இறால் குஞ்சுகள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அதே போல் இந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புவரை கடல் நீா் வந்ததால், அப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளது.
கடல் அரிப்பால் மீனவா்கள் தங்கள் படகுகள், மீன்பிடி வலை, என்ஜின் போன்றவற்றை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க போதிய இட வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனா். இப்பகுதியில் கடல் நீா் உள்புகாதவாறு கற்களைக் கொட்டியும், தூண்டில் வளைவு அமைத்தும் தங்கள் பகுதிக்கு பாதுகாப்பு தர வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்நிலையில், கடல் அரிப்பு குறித்து தகவல் அறிந்த தமிழ் வளா்ச்சி, தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் புது கல்பாக்கம் மீனவா் பகுதிக்கு வியாழக்கிழமை மாலை நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டாா்.