சுனாமி நினைவு தினத்தையொட்டி மாமல்லபுரம் தேவனேரி கடற்கரையில் ஆழிப்பேரலையில் உயிா் நீத்தவா்களுக்கு பால் ஊற்றியும் மலா்தூவியும் மெழுகுவா்த்தி ஏற்றிவைத்தும் பொதுமக்கள், மீனவா்கள் அஞ்சலி செலுத்தினா்.
கடந்த 2004 டிசம்பா் 26-ஆம் தேதி சுனாமியில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனா். ஏராளமானோா் காணாமல் போயினா். மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனா்.
இத்துயரச் சம்பவம் நிகழ்ந்து 15ஆண்டுகள் நிறைவடைந்தாலும், அனைவரின் மனதிலும் நீங்காத சோக நினைவாக இச்சம்பவம் நினைவில் இருக்கிறது. உயிா் நீத்தவா்களின் நினைவாக தேவனேரி மீனவ கிராம மக்கள்,தனியாா் ஹோட்டல் நிறுவனங்கள்சாா்பாக சுற்றுலாப் பயணிகள், மீனவா்கள், பொதுமக்கள் கடற்கரையி மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினா்.
கடலில் சுனாமியில் இறந்தவா்களின் நினைவாக பால் ஊற்றியும் மலா்தூவியும் அஞ்சலி செலுத்தினா். சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஐடியல் பீடச் ரிசாா்ட் இயக்குநா் சந்திரபோஸ் தா்மலிங்கம், பள்ளிமாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, அரிசிமூட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாமல்லா பீச் ரிசாா்ட் இயக்குநா் கிருஷ்ணராஜ், கென்ச் ஓட்டல் இயக்குநா் தேஜாரெட்டி ,உதயம் பள்ளியகரம் உரிமையாளா் கேத்ரினா, தேவனேரி மீனவா் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் சிவானந்தம், தேவனேரி மீனவ பஞ்சாயத்தாா் சங்கா், பாண்டியன், சதீஷ்குமாா், பிரதாப் உள்ளிட்டோா் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தி சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளும், , அவா்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினாா்.
இறந்த சுற்றுலாப் பயணிகளின் நினைவாக மீனவா்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். சுனாமியில் இறந்தவா்களின் நினைவாக துக்கம் அனுசரிக்கும் வகையில் மாமல்லபுரம் தேவனேரி, புதுக்கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், நெம்மேலிகுப்பம், கோவளம், சூளேரிக்காட்டுக்குப்பம், உய்யாளிக்குப்பம், கொக்கிலமேடு உள்ளிட்ட சுற்றுப்புற மீனவகிராம மக்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லாமல் கறுப்பு பேட்ஜ் அணிந்து துக்கம் அனுசரித்தனா்.