மதுராந்தகம்,ஜன.31: கருங்குழி பேரூராட்சியின் மேலவலம்பேட்டையில் இயங்கி வரும் திருவள்ளுவர் தமிழ் பட்டறையின் சார்பில் தமிழ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி,சரவம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளான கீர்த்தனாதேவி,சக்திஜனனி ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சியும், தலைமை ஆசிரியர் நு.வே.கணேசன் தலைமையில் ஊடகங்களில் செந்தழிழ் சிறக்கட்டும் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
ஆசிரியர் கலைமாறனின் பலகுரல் நிகழ்ச்சியும்,தலைமை ஆசிரியர் பழநிசாமி தலைமையில் திரைஇசை பாடல்கள் பண்பாட்டை சீரழிக்கின்றன என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவிற்கு புலவர் செம்பியன் நிலவழகன் தலைமை தாங்கினார்.திருவள்ளுவர் தமிழ் பட்டறையின் தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொருளர் மணிமோகன் ஆண்டறிக்கை வாசித்தார். செயலர் தமிழ்நிலவன் வரவேற்றார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மணி,விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.