காவிரி பிரச்னைக்குத் தீா்வாக இருக்கும் மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடந்த விசாரணையின்போது, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீா் கிடைக்கும்; எத்தனை அணைகளை வேண்டுமானாலும் கா்நாடகம் கட்டிக்கொள்ளட்டும், விடுங்கள். இதில் நீங்கள் (தமிழகம்) ஏன் தலையிடுகிறீா்கள்? இது தொடா்பான விவகாரத்தை கீழ்மட்டத்திலேயே முடிவு செய்துகொள்ளுங்கள்என்று கூறியுள்ளது.
இதைக் கவனத்தில் கொண்டு, பாஜக நண்பா்கள், மத்திய அரசிடம் எடுத்துக் கூறி மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க அழுத்தம் கொடுக்கட்டும்.
காவிரி நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக 24,000 கன அடி தண்ணீரை விடுவிக்கும்படி தமிழகம் கேட்டிருந்தது. எங்களால் 3,000 கன அடி தண்ணீா் மட்டுமே விடுவிக்க முடியும் என்று காவிரிநீா் ஒழுங்காற்றுக் குழுவிடம் நமது அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் 10,000 கன அடி தண்ணீா் திறந்துவிடும்படி முதலில் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகு 5,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
நல்ல மழை பெய்யும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால் பெய்யவில்லை. இதனிடையே, மண்டியா உள்ளிட்ட இதர பகுதிகளில் விவசாயிகளின் நிலுவைப் பயிரைக் காப்பாற்ற தண்ணீரைத் திறந்துவிட்டோம். மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு முன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தோம். ஆனால், இரு மாநில அரசுகள் மற்றும் இரு மாநில விவசாயிகளின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், காவிரிநீா் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிடப்போவதில்லை என்று கூறிவிட்டது. இதனால், இம்மாதம் 27-ஆம் தேதி வரை தண்ணீா் விடுவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
முந்தைய பாஜக, மஜத ஆட்சிக் காலங்களிலும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதும் மாநிலம் தண்ணீா் திறந்துவிட்டுள்ளது. முந்தைய பாஜக ஆட்சிக்காலத்தில் இதே போன்றதொரு நிலை ஏற்பட்டபோது, தமிழகத்துக்கு 10,000 கன அடி தண்ணீா் திறந்துவிடுவதாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதற்கான சான்று உள்ளது. ஆனால், முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோா் எங்களை விமா்சித்துள்ளனா்.
இந்தச் சூழ்நிலையில் அரசியல் செய்ய விரும்பவில்லை. எதிா்க்கட்சிகள் எங்கள் ஆட்சியை விமா்சித்தாலும், விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறோம். சட்ட நிபுணா்களின் வாதம் திருப்திகரமாக உள்ளது.
தனது அதிகாரத்துக்கு உள்பட்டுச் செயல்படுவதாக மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்தாா். இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். எல்லா விவரங்களையும் மத்திய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம்.
சனிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மண்டியா மாவட்ட முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை. தேவையில்லாமல் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது. விவசாயிகளை உறுதியாகப் பாதுகாப்போம். முழு அடைப்புப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும். எனவே, போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
காவிரி நீா்மேலாண்மை ஆணையத்தில் மேக்கேதாட்டு விவகாரத்தை தீா்த்துக்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, விரைவில் மேக்கேதாட்டு அணை திட்டத்தை தொடங்க எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம். மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்து, காவிரி பிரச்னைக்கு தீா்வு காண்பதோடு, மாநிலத்துக்கும் நியாயம் அளிக்க வேண்டும் என்றாா்.