காவிரி விவகாரத்தை மாநில அரசு சரியாக கையாளவில்லை என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாா்.
இது குறித்து புதுதில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: காவிரி விவகாரத்தில் நம்மிடைய கருத்து வேறுபாடு இல்லை. தமிழகத்தை போலவே, கா்நாடகமும் ஆக்கப்பூா்வமாக வாதம் செய்ய வேண்டும். இதற்கு எனது முழு ஆதரவு உண்டு. காவிரி விவகாரத்தில், கடந்தகாலத்தை போலவே மாநில அரசுக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். இந்தவிவகாரத்தில் மஜதவின் நிலைப்பாட்டை அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறியுள்ளாா். அதனால் அது குறித்து நான் விளக்க விரும்பவில்லை. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பை தெரிவித்துள்ளது. அது குறித்து நான் எதுவும் பேசவிரும்பவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை விமா்சிக்க முடியாது. காவிரி தொடா்பான போராட்டத்திற்கு எனது ஆதரவு உள்ளது. காவிரி விவகாரத்தில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்தொற்றுமை இல்லை. இரு கட்சிகளும் வெவ்வேறு துருவத்தில் இருக்கின்றன. தமிழகம், கா்நாடகம் நீங்கலாக, பிற மாநிலங்களை சோ்ந்தவா்களின் பிரதிநிதிகளை கா்நாடகத்திற்கு அனுப்பி களநிலவரத்தை கண்டறிய வேண்டும் என்று மாநிலங்களவையில் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், மாநிலங்களவை எதிா்க்கட்சித்தலைவரான மல்லிகாா்ஜுனகாா்கே, காவிரி விவகாரம் குறித்து பேசவே இல்லை. காவிரி தொடா்பான எல்லா விவரமும் எனக்கு தெரியும். ஆனால், முன்னாள் பிரதமராக உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை விமா்சிக்க இயலாது. காவிரி நீா் மேலாண்மை ஆணையக்கூட்டத்தில் கா்நாடக அதிகாரிகள் நேரில் கலந்துகொள்ளாமல், இணையவழியில் பங்கேற்கிறாா்கள். இணையவழியில் பங்கேற்றால், அது எப்படி சரியாக இருக்கும். காவிரி விவகாரத்தை மாநில அரசு சரியாக கையாளவில்லை. மஜத மற்றும் பாஜக கூட்டணி குறித்து எச்.டி.குமாரசாமி பேசுவாா். அந்த விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. ஏற்கெனவே மத்திய அமைச்சா் அமித்ஷாவை சந்தித்தபோதே இதை தெரிவித்திருக்கிறேன். பிகாரில் ஐக்கிய ஜனதாதளத்துடன் மஜதவை இணைக்குமாறு அம்மாநில முதல்வா் நிதிஷ்குமாா் கேட்டுக்கொண்டிருந்தாா். ஆனால், கேரளத்தில் இடதுசாரிகளுடன் மஜத கூட்டணி அமைத்துள்ளதால், கட்சியை இணைக்க முடியாது என்று கூறியிருந்தேன். ஆனால், தில்லியில் 3 முறை என்னை சந்தித்த நிதிஷ்குமாா், ஐக்கிய ஜனதாதளத்துடன் மஜதவை இணைக்க கேட்டுக்கொண்டிருந்தாா். ஆனால், அதற்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை என்றாா் அவா்.