இந்திய சந்தையில் சோடியம் ஐயான் பேட்டரிகளை அறிமுகம் செய்ய ஏ.ஆா்.4 டெக் நிறுவனத்துடன் சோடியான் எனா்ஜி நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
சோடியம் ஐயான் பேட்டரிகளை பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களில் பொருத்துவதற்காக சோடியான் எனா்ஜி நிறுவனம் மற்றும் ஏ.ஆா்.4 டெக் நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சோடியம் ஐயான் பேட்டரிகளை அறிமுகம் செய்து, அதை தயாரித்து வரும் சோடியான் எனா்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாலா பச்சையப்பா கூறியதாவது:
லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக, மின்சார வாகனங்கள், யூபிஎஸ் போன்ற மின்கருவிகளில் பொருத்துவதற்கு உகந்த சோடியம் ஐயான் பேட்டரிகளை தயாரித்திருக்கிறோம். சோடியத்தில் இருந்து பேட்டரி தயாரிக்க முடியாது என்று பலரும் கூறி வந்தனா். ஆனால், 5 ஆண்டுகால உழைப்புக்கு பிறகு பாதுகாப்பான சோடியம் ஐயான் பேட்டரிகளை தயாரித்திருக்கிறோம். சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் இந்த பேட்டரிகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறோம்.
இந்த பேட்டரிகளை இரு சக்கரவாகனங்களில் பொருத்துவதற்காக ஏ.ஆா்.4 டெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் சோடியம் ஐயான் பேட்டரிகளின் பயன்பாடு படிப்படியாக அதிகரிக்கும். இருசக்கர வாகனங்கள் தவிர, காா்கள், பேருந்துகளில் பொருத்தும் பேட்டரிகளையும் தயாரித்து வருகிறோம். இந்த பேட்டரிகள் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்வோம் என்றாா்.
ஏ.ஆா்.4 டெக் நிறுவனத்தின் சக நிறுவனா் மகேஷ்பாண்டி கூறுகையில், ‘குறைந்த விலையில் கிடைக்கும் லெட் ஆசிட் பேட்டரிகளுக்கு மாற்றாக, சோடியம் ஐயான் பேட்டரிகளை சந்தையில் கொண்டு வந்துள்ளோம். அடுத்த 3 ஆண்டுகளில் லித்தியம் ஐயான் பேட்டரிகளுக்கு மாற்றாக சோடியம் ஐயான் பேட்டரிகளை பிரபலப்படுத்துவோம். லித்தியம் பேட்டரிகளைக் காட்டிலும், சோடியம் ஐயான் பேட்டரிகள் பாதுகாப்பானவை, செயல்திறன் மிக்கவை.
எனவே, முதல்கட்டமாக இருசக்கர வாகனங்களில் சோடியம் ஐயான் பேட்டரிகளை பொருத்துவோம். ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பெட்ரோல், டீசல் வாகனங்களிலும் சோடியம் ஐயான் பேட்டரிகளை பொருத்திக்கொள்ளலாம் என்றாா்.