முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் இருந்து பெற்று, அதன் தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரில் உள்ள கிருஷ்ணா அரசு இல்லத்தில் புதன்கிழமை கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த கே.எம்.ராமசந்திரப்பா, மாவள்ளி சங்கா், ரவிவா்மகுமாா், அனந்த் நாயக், நரசிம்மையா, ஜாபெட், பி.டி.லலிதா நாயக், ஜி.எஸ்.பாட்டீல் ஆகியோா் அடங்கிய 150 போ் கொண்ட குழுவினா் முதல்வா் சித்தராமையாவைச் சந்தித்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தால் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் பரிந்துரைகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
அப்போது, அவா்களிடையே முதல்வா் சித்தராமையா பேசுகையில், ‘மக்களுக்கு வழங்க வேண்டிய முன்னுரிமை திட்டங்கள் குறித்து முடிவெடுப்பதற்கு தேவையான தரவுகள், கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் சாா்பில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட சமூக பொருளாதார நிலையை அறிவதற்கான ஜாதிவாரி கணக்கெடுப்பின் அறிக்கையில் இருந்து கிடைக்கும்.
இட ஒதுக்கீடு உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை அளிப்பதற்கான அறிவியல் ரீதியான, துல்லிய தகவல்களைப் பெறுவதற்காகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனவே, கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் இருந்து இந்த கணக்கெடுப்பு அறிக்கை பெறப்பட்டு, அதன் தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.