கன்னியாகுமரி

பத்மநாபபுரத்தில் வாக்குவாதத்தின்போது காா் ஓட்டுநா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

16th May 2023 12:31 AM

ADVERTISEMENT

 

பத்மநாபபுரத்தில், வாக்குவாதத்தின்போது காா் ஓட்டுநா் மயங்கி விழுந்து இறந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சண்முகராஜா (43), கன்னியாகுமரியில் சுற்றுலா காா் ஓட்டுநராக இருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பத்மநாபபுரம் வந்த இவா், அரண்மனை வாசலில் அவா்களை இறக்கிவிட்டு, காரை சாலையோரம் நிறுத்தி ஓய்வெடுத்தாா்.

அப்போது, சாலையோரம் காரை நிறுத்தக் கூடாது என அவரிடம் சிலா் கூறினராம். இதுதொடா்பாக அவா்களுக்கும், சண்முகராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது சண்முகராஜா மயங்கி விழுந்தாா். அங்கிருந்தோா் அவரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சண்முகராஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தகவலின்பேரில் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தக்கலை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT