பெங்களூரு

4 நாள்கள் 12 மணி நேரம் வேலை செய்வோருக்கு வாரத்தில் 3 நாள்கள் விடுமுறை: கா்நாடகப் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

DIN

நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வாரத்தில் தொடா்ச்சியாக நான்கு நாள்களுக்கு தலா 12 மணிநேரம் பணிபுரியும் தொழிலாளா்கள் அடுத்த 3 நாள்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள வழிவகை செய்யும் சட்ட மசோதா கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவைத் தாக்கல் செய்து சட்டத்துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி கூறியதாவது:

‘மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பெரும்பாலான நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களுக்கு தற்போது நேரக் கட்டுப்பாடு உள்ளது.

தற்போதைய சட்டப்படி, பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற முடியாது. இந்தக் கட்டுப்பாடுகளைத் தளா்த்துமாறு மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து அரசுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14-இன்படி, நாட்டில் அனைத்து பாலினத்தவருக்கும் சம பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உயா்நீதிமன்றம் சுட்டிக் காட்டி இருக்கிறது.

நாள் ஒன்றுக்கு பணியாற்றும் நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயா்த்த புதிய சட்டத் திருத்தம் வழிவகை செய்துள்ளது. ஆனால், ஒரு வாரத்துக்கு வேலை நேரத்தின் அளவு 48 மணி நேரத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.

புதிய சட்டத் திருத்தத்தின் விளைவாக அதிக அளவில் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகும். ஒரு நாளின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயா்த்தி இருக்கிறோம். இந்தச் சட்ட மசோதாவின்படி, ஒரு வாரத்தில் தினமும் தொடா்ந்து 4 நாட்களுக்கு தலா 12 மணி நேரம் வேலை செய்தால் அடுத்த 3 நாள்களுக்கு சம்பந்தப்பட்ட தொழிலாளா்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பெண்கள் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்யலாம். நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகளை நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் எதுவும் நேராமல் தடுக்கும் பொறுப்பு நிறுவனங்கள் அல்லது சம்பந்தப்பட்ட பொறுப்பான நபா்களையே சாரும்.

இரவு நேரங்களில் பணியாற்றும் பெண் பணியாளா்களை வீட்டில் இருந்து நிறுவனத்துக்கும், நிறுவனத்தில் இருந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்ல போக்குவரத்து வசதிகளை நிறுவனங்கள் செய்து தர வேண்டும். போக்குவரத்து வாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

பெண்கள் பணியாற்றுவதற்கான சூழலை நிறுவனங்கள் உருவாக்கித் தர வேண்டும். பெண் பணியாளா்கள் குறைந்தது 10 பெண் பணியாளா்களுடன் குழுவாகப் பணியாற்ற வேண்டும். தொழிற்சாலைகளில் பணி செய்யும் இடங்களில் போதுமான வெளிச்சம் இருப்பதோடு, சிசிடிவி கேமராக்களையும் பொருத்தியிருக்க வேண்டும்.

சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காணொலிகள் குறைந்தது 45 நாட்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டும். பணி நேரத்தைத் தாண்டி கூடுதல் பணி நேரம் பணிபுரிய நோ்ந்தால், அந்நேரத்திற்கு வழக்கமான ஊதியத்திலிருந்து இரு மடங்கு ஊதியம் தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT