கா்நாடக அரசின் தலைமைச் செயலாளருக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கா்நாடகத்தில் உள்ள கிராமங்களில் இடுகாடுகளுக்குத் தேவையான நிலங்களை 6 வாரங்களுக்குள் ஒதுக்குமாறு கா்நாடக அரசுக்கு உயா்நீதிமன்றம் 2019 இல் உத்தரவிட்டிருந்தது. 2022 செப்டம்பரில் இதுதொடா்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துபோது, கா்நாடக அரசு சாா்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இதுவரை 28,815 இடுகாடுகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 3,765 இடுகாடுகளுக்கு நிலங்களை ஒதுக்கும் பணி நிலுவையில் உள்ளதாகவும், அரசு நிலங்கள் இல்லாத 516 இடங்களில் நிலத்தை அடையாளம் கண்டு, அவற்றை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இடுகாடுகளுக்கு நிலத்தை ஒதுக்குமாறு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இதுவரை கா்நாடக அரசு நிறைவேற்றவில்லை என்றுகூறி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முகமது இக்பால் என்பவா் தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி பி.வீரப்பா, நீதிபதி கே.எஸ்.ஹேமலேகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை நடந்தது. நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மேலும் 2 வாரங்கள் அவகாசம் தேவை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த 2 வாரங்களில் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த தவறினால் அடுத்த விசாரணையின்போது அரசின் தலைமைச் செயலாளா் நேரில் ஆஜராக வேண்டும். அப்போது அவா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று எச்சரித்து அடுத்த விசாரணையை பிப். 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.