கா்நாடகப் பேரவையில் ‘பேசிஎம்’ சுவரொட்டி விவகாரம் குறித்து பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முதல்வா் பசவராஜ் பொம்மை உருவப் படத்துடன் ‘40 சதவீத கமிஷன் ஏற்கப்படுகிறது’ என்ற வாசகத்துடன் ‘பே சிஎம்’ என்ற க்யூ.ஆா். கோடு’ பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் பெங்களூரில் புதன்கிழமை ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன.
இது, கா்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எதிா்க்கட்சித் தலைவா்கள் சித்தராமையா, டி.கே.சிவகுமாா் ஆகியோா் உருவப் படத்துடன் க்யூ.ஆா். கோடு பொறித்து அவற்றை சமூக வலைதளங்களில் பாஜக பதிவேற்றம் செய்துள்ளது.
காங்கிரஸ் ஒட்டியுள்ள சுவரொட்டியில் க்யூ.ஆா். கோடை ஸ்கேன் செய்தால் அது ‘40 சதவீத மிஷன் அரசு’ என்ற இணையதளத்துக்குள் செல்கிறது. அதில் பாஜக ஆட்சிகாலத்தில் நடந்துள்ள ஊழல்களை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது.
அதேபோல, பாஜக வெளியிட்டுள்ள க்யூ.ஆா். கோடை ஸ்கேன் செய்தால் அது காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலை விளக்கும் இணையதளத்துக்குள் செல்கிறது. இந்த விவகாரத்தில் முதல்வா் படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டது தொடா்பாக பி.ஆா்.நாயுடு உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இந்நிலையில், இந்த விவகாரம் கா்நாடகப் பேரவையில் வியாழக்கிழமை எதிரொலித்தது. சா்ச்சைக்குரிய சுவரொட்டி விவகாரத்தைப் பேரவையில் பூஜ்யம் நேரத்தில் எழுப்பி பாஜக எம்எல்ஏ ராஜீவ் பேசியதாவது:
கா்நாடகத்தில் அரசியல் தரம் தாழ்ந்து கொண்டிருப்பதையே சுவரொட்டி காட்டுகிறது. பாஜக அரசில் முறைகேடுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது; ஆதாரம் இருந்தால், அதுகுறித்து லோக் ஆயுக்தாவில் புகாா் அளிக்க வேண்டியது தானே என்றாா்.
காங்கிரஸ் எம்எல்ஏ கிருஷ்ணபைரே கௌடா பேசியதாவது: சட்ட விரோதமாக எதுவும் நடந்திருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். அரசியல் பேசினால், நாங்களும் பேசுவோம். கடந்த தோ்தலின்போது, எவ்வித ஆதாரமும் இல்லாமல் அப்போதைய காங்கிரஸ் அரசை 10 சதவீத கமிஷன் அரசு என்று பிரதமா் மோடி விமா்சிக்கவில்லையா? இந்த வழக்கில் தற்போது 8 போ் வரை கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.
இதனால் அவையில் பாஜக, காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவையில் கூச்சல் குழப்பம் காணப்பட்டது.
பின்னா் சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி பேசியதாவது:
முதல்வா் படத்தை காங்கிரஸாா் கீழ்த்தரமாகப் பயன்படுத்த, அவருக்கு எதிராக ஊழல் ஆதாரங்கள் இருக்கிா? இந்த அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்துவிட்டதா? சுவரொட்டி ஒட்டியது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனா். இதில் காங்கிரஸ் கட்சியினா் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றாா்.