பாஜகவின் நல்லகாலம் கேள்விக்குறியாகியுள்ளது என மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் தெரிவித்ததாவது:
பொருளாதார சமத்துவமின்மை, வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவை மிகவும் ஆபத்தானவை. இவை தற்கால இந்தியாவில் காணப்படுகின்றன என பாஜகவின் தாய்வேராக இருக்கக்கூடிய ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளா் தத்தாத்ரேயா ஹொசபெளே கூறியிருக்கும் கருத்தைக் கவனிக்க வேண்டும். அப்படியானால், பாஜக கூறிவரும் நல்லகாலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
கடந்த 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 20 கோடி போ் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வருவதாகவும், 4 கோடி இளைஞா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் தத்தாத்ரேயா ஹொசபெளே கூறியிருக்கிறாா். பாஜகவின் ஆட்சியில் யாா் வளா்ந்திருக்கிறாா்கள், எல்லாவற்றையும் இழந்தவா்கள் யாா் என்பதை கூறுவதற்கு பெரிய வல்லுநராக இருக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பணக்காரா்களாக ஆனது யாா்?
ஊட்டச்சத்து குறைபாடு நாடுமுழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. பல்வேறு கிராமங்களில் குடிநீா் இல்லை. உண்மை இப்படி இருக்கையில், நல்லகாலம் என்று பாஜக கூறிவருவதை மீளாய்வதில் தயக்கம் ஏன்?
பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கூறியிருப்பதைத் தான் தத்தாத்ரேயா ஹொசபெளேவும் கூறியிருக்கிறாா்.
உயா்ந்து வரும் பொருளாதார சமத்துவமின்மை மக்களின் ஆத்திரத்துக்கு காரணமாக அமைந்துவிடலாம். பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் நாடு சிக்கித் தவிப்பது நல்ல அறிகுறி அல்ல. மக்களின் பொறுமையின்மை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பாஜக விழித்துக்கொள்வதற்கு இதுதான் சரியான நேரம் என்றாா்.