ஊழலில் மூழ்கியுள்ள பாஜக தலைமையிலான கா்நாடக அரசை உடனடியாக கலைக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வில் மோசடி வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அம்ருத்பால், லஞ்சம் பெற்ற வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜே.மஞ்சுநாத் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை முதல்வா் பசவராஜ் பொம்மை ராஜிநாமா செய்ய வேண்டும்.
காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வு மோசடி வழக்கில் அமைச்சா்கள், அரசியல்வாதிகள் பலருக்கும் தொடா்பு உள்ளது. எனவே, இந்த வழக்கை சிஐடி விசாரிப்பது கடினம். அதனால், இந்த வழக்கு விசாரணையை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும்.
காவல் துணை ஆய்வாளா் பணித் தோ்வில் மோசடி எதுவும் நடக்கவில்லை என்று சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா். இதன்மூலம் சட்டப்பேரவையை அவா் தவறாக வழிநடத்தியிருக்கிறாா். எனவே, உள்துறை அமைச்சா் பதவியிலிருந்து அரக ஞானேந்திராவை நீக்கி அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஊழலில் மூழ்கியுள்ள பாஜக அரசை உடனடியாக கலைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆளுநா் எடுக்க வேண்டும் என்றாா்.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறுகையில், ‘நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். இதற்காக நீதிமன்றத்துக்கு தலைவணங்குகிறேன். ஜனநாயகத்தைக் காக்கும் பணியை நீதிமன்றம் செய்துள்ளது.
மாநில நிா்வாக வரலாற்றில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது கரும்புள்ளியாகியுள்ளது. எனவே, பாஜக ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்றாா்.